

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தில், த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைவர் விஜயை சந்தித்தனர்.
காங்கிரஸ் கொடியை ஏந்தி வந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்ட குழுவினரை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா வரவேற்றனர்.
விஜயை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவருக்கு காங்கிரஸ் துண்டை அணிவித்து பூங்கொடுத்து கொடுத்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜயிடம் வழங்கினர்.
இதையடுத்து தவெக பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.
தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் சீட் ஒதுக்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.