

தமிழ்நாட்டில், மொத்தம் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. அதாவது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பக்கோணம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன.
இதில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர எஞ்சி உள்ள 7 போக்குவரத்துக் கழகங்களுக்கும் தமிழக அரசு 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. பஸ்களை வாங்கி உள்ளது. இந்த புதிய பஸ்கள் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளான கடந்த 22-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் புதிய பஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து இந்த 300 புதிய பஸ்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பெரம்பூர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள 29A புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சருடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் பயணம் மேற்கொண்டனர். அப்போது நடத்துநரிடம் காசு கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டார். ஓட்டுநர், நடத்துநர்களிடம் கலந்துரையாடினார். மேலும் ஓட்டுநரின் அருகாமையில் உள்ள முன் இருக்கையில் அமர்ந்து வீடியோ எடுத்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மற்றும் மக்களுக்கு கை அசைத்தப்படி சென்றார்.