

சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தின் விரிவாக்கத்திற்காக மேல்மா, குறும்பூர் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2700 ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறையை ஏவி நிலங்களைப் பறிக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
விளைநிலங்களை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு இரட்டை நிலைகளை கடைப்பிடிக்கக்கூடாது. அன்னூர் பகுதியில் சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த நிலைப்பாட்டை தமிழகத்தின் பிற பகுதிகளில் கடைபிடிக்க தமிழக அரசு மறுப்பது தவறு. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.