

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கான தொகுதிகள் இன்னும் முடிவாகாமல் உள்ளது. மத்திய மந்திரி பியூஷ் கோயலைச் சந்தித்து பேசிய த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் என முடிவாகிவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் நேற்று சந்தித்துப் பேசினார். அதன்பின் பேட்டி அளித்த அவர், த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றிய விவரங்களை அ.தி.மு.க. தலைமை அறிவிக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் த.மா.கா. போட்டியிடுகிறது.