

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு அ.தி.மு.க. கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது மீண்டும் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் இன்றி, சட்டப்பேரவை அ.தி.மு.க. குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அ.தி.மு.க. மொத்தத்தில் 169 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், அ.தி.மு.க. கட்சி வெறும் 47 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் அ.தி.மு.க. கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாமல் போனது, எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து தேர்தலில் அக்கட்சி சந்தித்து வரும் தொடர் தோல்விகள் மற்றும் த.வெ.க. ஆட்சி அமைப்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் ஆட்சியிலும் பங்கேற்கலாம், சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினரை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் குழு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் வீட்டுக்குச் சென்று பேசினர். இருப்பினும், சி.வி. சண்முகம் தரப்பு மூத்த நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன், எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராக ஆதரவு தெரிவித்து அவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.-க்கள் பதவியேற்பு இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் மொத்தமாக உள்ள 47 எம்.எல்.ஏ.-க்களில் 35-க்கும் மேற்பட்டோர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.-க்கள் என சுமார் 60 சதவீதம் பேர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணி பக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு தற்போது சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது.