வி.சி.க. அலுவலகத்தில் போலீசார் குவிப்பு... த.வெ.க. தலைவர் விஜய் வருகை?

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிட போவதாக திருமாவளவன் அறிவித்தார். கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின் வாங்கினார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. தற்போது த.வெ.க. ஆட்சி அமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய் கோரினார். இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம் என்று குரல் கொடுத்துள்ளனர்.

அதற்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கூட்டணி ஆட்சி என்பது திருமாவளவன் முன்னெடுக்கும் அரசியல் என்பதால், அவரும் விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் முடிவை எடுத்தார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டு வென்றுள்ளார். இதில் அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது. அவர் ராஜினாமா செய்தால், அந்த தொகுதிக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் வரும்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக இருக்கிறது. எனவே த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனிடையே, இன்று காலை த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்து இருந்தார். இதனால் இன்று காலை முதல் திருமாவளவன் எந்த மாதிரியான முடிவை அறிவிப்பார் என்று பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையே, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் த.வெ.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com