நீட் மறுதேர்வு கோரிய வழக்கு: கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
நீட் மறுதேர்வு கோரிய வழக்கு: கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை:

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம ஷேசாத்திரி என்ற ஒரு மாணவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது எனவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வாதிட்டார்.

480 மாணவர்கள் எழுதியதாகவும், 13 மாணவர்கள் மட்டுமே வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ. ஆர்.எஸ்.சுந்தரேசன் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என மறுத்து விட்டனர்.

அதே வேளையில் தேர்வு மையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com