என் தலைக்கு எதுக்கு ரூ.10 கோடி.. ஒரு சீப்பு போதாதா? சாமியாரின் சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வைரல்.
என் தலைக்கு எதுக்கு ரூ.10 கோடி.. ஒரு சீப்பு போதாதா? சாமியாரின் சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
Published on

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், உ.பி மாநிலம், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுபவர்களுக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில், சாமியாரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "என் தலைக்கு எதற்கு ரூ.10 கோடி ? ஒரு சீப்பு தந்தால் நானே என் தலையை சீவி கொள்வேன்.

இப்படித்தான் தலைவர் கருணாநிதியை சாமியார் ஒருவர் மிரட்டினார். கருணாநிதி தலையை சீவினால் ரூ.1 கோடி பரிசு கொடுப்பதாக கூறியிருந்தார். அதற்கு கருணாநிதி, " நானே என் தலையை சீவியது இல்லை. இதில் இன்னொருவன் வந்து சீவுகிறானா " என்றார்.

தலைவர் கருணாநிதி வழியில் வந்தவன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com