நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்

கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்
Published on

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.

அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், கே.கே நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியைச் சேர்ந்த 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்ததாகவும், இந்த மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து ஜூன் 4-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து 16 பேரும் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com