பதவி சுகத்திற்காக மாற்று கட்சி.. மக்கள் தீர்ப்பு, ஜனநாயகத்துக்கு எதிரானது..!- அன்புமணி

முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
பதவி சுகத்திற்காக மாற்று கட்சி.. மக்கள் தீர்ப்பு, ஜனநாயகத்துக்கு எதிரானது..!- அன்புமணி
Published on

பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.

த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?

அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.

ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது.

தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com