அண்ணாவின் பெயரை சொல்லக்கூட தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது- ஜெயக்குமார்

தி.மு.க. அரசு அண்ணாவின் வழியில் நடக்கவில்லை.விஜய் எங்களுக்கு எதிரி இல்லை.
அண்ணாவின் பெயரை சொல்லக்கூட தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது- ஜெயக்குமார்
Published on

சென்னை:

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தி.மு.க. அரசு அண்ணாவின் வழியில் நடக்கவில்லை. மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புகழை பாடுவதும் அவரது தந்தையின் பெயரை வைப்பதுமாக செயல்பட்டு வருகிறார். அண்ணாவின் பெயரை எந்த கட்டிடத்திற்கும் வைத்ததாக தெரியவில்லை.

இந்த ஆட்சி கமிஷன் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அறிவாலயத்தின் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் ஆர்.எஸ்.பாரதி கம்பி கட்டுற கதைகளை எல்லாம் சொல்லி வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் விரட்டிய விவகாரங்களில் பெண்களின் அபய குரலை அனைவருமே பார்த்தோம். அந்த பெண்கள் கதவை திறந்து இருந்தால் என்னவாகி இருக்கும்?

காவல்துறையினர் யாருக்கும் அரசியல் பின்புலம் இல்லை என்று சொல்கிறார்கள். அதன்பிறகு அரசியல் பின்புலம் உள்ளதாக ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். இந்த சம்பவத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை அவரே எழுதியுள்ளார்.

திருமாவளவன் முழுக்க முழுக்க தி.மு.க.விற்கு கொத்தடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளார் அவர் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

த.வெ.க. முதல் வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இரண்டு ஆண்டு குழந்தைக்கு வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு எதிரி இல்லை.

மத்திய பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் கிடையாது. விமானத்தில் பயணிப்பவர்கள் வசதி உள்ளவர்களா? ரெயிலில் பயணிப்பவர்கள், ஏழைகளைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. தமிழ்நாடு பற்றி ஒரு வார்த்தை இருக்கிறதா?

பீகாரில் தற்போது தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு பிரத்யேக திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துகின்ற குடிமகனின் வரியை எடுத்து அந்த மாநிலத்திற்கு போட்டால் என்ன நியாயம்? பா.ஜ.க. கட்சியின் நிதியை எடுத்து பீகாருக்கு வளர்ச்சி நிதியாக கொடுக்க வேண்டி யது தானே?

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தில் என்றென்றும் மாற்றமில்லை என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com