என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக உரிமைகளை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
- தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.
- ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் ரெயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவது.
சென்னை:
முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.
ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு", "15-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி", "ஒன்றிய அரசும் - மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி" ஆகியவற்றை பாராளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைப்பது.
தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து ஒன்றிய அரசு மவுனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய ரெயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பது.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் ரெயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவது.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






