என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அறநிலையத்துறை சார்பில் கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதி கிடைக்காது - இ.பி.எஸ்.
- மாணவர்களின் நலன் கருதி அதை, அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர சொன்னேன்.
- அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்தோம்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது கோவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், விழுப்புரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறையில் இருந்துதான் அதற்கு நிதி ஒதுக்க முடியும். மாணவர்களின் நலன் கருதி அதை, அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர சொன்னால், கண்ணு, காது, மூக்கு வச்சு இரண்டு நாளாக விவாதம் நடக்கிறது
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்ற முறையில், நானே முடிவு செய்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்இடஒதுக்கீடு கொண்டுவந்தேன். ஏழைகளும் மருத்துவர் ஆகலாம் என்ற கனவை நினைவேற்றிய அரசு அதிமுக அரசு
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்தோம். ஒரேயொரு மருத்துவக் கல்லூரி உங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வர முடிந்ததா?" என்று தெரிவித்துள்ளார்.






