சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வது அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கதல்ல- எடப்பாடி பழனிச்சாமி

அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன்
சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வது அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கதல்ல- எடப்பாடி பழனிச்சாமி
Published on

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.

மருத்துவர்கள் தங்கள் நேரத்தை மற்றும் உழைப்பை பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

விடியா திமுக அரசு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை எதிர்ப்பதாக கூறி மக்களிடம் கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இது முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது.

இது மருத்துவப் பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com