

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் அவரது மனைவி பொற்கொடி தமிழக பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் இதற்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங் போட்டியிட்டு சுயேட்சையாக வெற்றி பெற்றும் உள்ளார்.
இந்த நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி திரு.வி.க. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளார். இன்று வெளியான 17 பேர் கொண்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பொற்கொடி திரு.வி.க.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொற்கொடியை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க. வாக்குகளுடன் இந்த தொகுதியில் நிச்சயம் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைக்க முடியும் என்பது அந்த கட்சியினரின் நம்பிக்கையாக உள்ளது.