என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் 20-ந்தேதி பா.ம.க. போராட்டம்: அன்புமணி அழைப்பு
    X

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் 20-ந்தேதி பா.ம.க. போராட்டம்: அன்புமணி அழைப்பு

    • பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.
    • நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான தி.மு.க. அரசு, இன்னும் இரு மைல்கற்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாட்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

    2-ஆவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்திடம் இருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது.

    தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் ஓர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஓர் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்வது இது தான் முதல் முறையாகும். இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 14.7.2006-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து 15.9.2007-ம் நாள் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    அதேபோல், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 25.3.2008-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் 243 நாள்களில் அதே ஆண்டு நவம்பர் 22-ம் நாள் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்பின் 2009 பிப்ரவரி 26-ம் நாள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதைவிட பல மடங்கு, அதாவது 915 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தாமதித்து வருகிறது.

    வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் முதன்முதலில் அதற்கு வழங்கப்பட்ட 3 மாத காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்து, அதனடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் வன்னிய மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 600 எம்.பி.பி.எஸ் இடங்களும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களும் கிடைத்திருக்கும்.

    அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80 ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும் கிடைத்திருக்கும். மேலும் அரசுத்துறைகளில் வன்னியர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைகள் கிடைத்திருக்கும். இயல்பாக கிடைக்க வேண்டிய இந்த உரிமைகளை பறித்து தி.மு.க. அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.

    தி.மு.க. அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், டா்கடர் அய்யா வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20-ம் நாள், இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம்.

    நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.

    இதை மனதில் கொண்டு பா.ம.க. வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாட்டாளித் தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், தி.மு.க.வின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூக நீதியை வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன். வன்னிய மக்களின் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாட்டாளி சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன்.

    இ்வவாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×