என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் - தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்
- பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நினைவுக்கு வருவது சமூகநீதியும், மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தான்.
- தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16 ம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த மகத்தான தருணத்தில் இம்மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பிய டாக்டர் ராமதாசுக்கு வணக்கங்களையும், உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நினைவுக்கு வருவது சமூகநீதியும், மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தான். 36 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிப் போராளி டாக்டர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே அனைத்து மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களின் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்; இழந்த உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த பாதையில் தான் நமது பயணம் தொடருகிறது.
தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைத்தல் ஆகிய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்.
கடந்த மே 30-ந் தேதி அந்தப் பணிகள் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே பேரெழுச்சி காணப்படுகிறது.
இதை பயன்படுத்திக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25-ம் நாள் முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். அதுவே தி.மு.க. அரசை அகற்றுவதற்கான தொடக்கமாகட்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ம் ஆண்டு தொடக்கவிழாவை, அனைத்துக் கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பா.ம.க. கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
இந்த நாளில் தொடங்கி 9 மாதங்களில் நாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள், மக்களை வதைக்கும் தி.மு.க. அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு விழாவை ஆளும் கூட்டணிக் கட்சியாக கொண்டாடுவதற்கு தொடக்கவுரை எழுதும் வகையிலும் அமைய வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






