

தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களால் மனவேதனை அடைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு, தஞ்சையை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. தொண்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வினரிடம் ஆசைவார்த்தை காட்ட வேண்டாம். நீங்கள் நடத்தி வரும் நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலியாகி இருக்கிறது. ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திராவிடக் கட்சியைச் சேர்ந்த 90 சதவீத தொண்டர்கள் விஜய் தலைமையிலான கட்சிக்குத் தாவத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு, அ.தி.மு.க. தொண்டர்களைக் கவர்ந்து இழுக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் கடுமையான அரசியல் விளைவுகள் ஏற்படும் என்று ஆர்.பி.உதயகுமார் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.