என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
- தமிழ்ப் பாடத்திற்கு சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை.
- தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின் பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப் பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
2015-16-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்கி, கடந்த 18.09.2014 அன்று அப்போதைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
அதன்படி நடப்பு 2024-25-ம் ஆண்டில் பிற பாடத் திட்டங்களை பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்க் கட்டாயப் படமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாத திமுக அரசு, அந்தக் கடமையில் இருந்து தனியார் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் 2023-ம் ஆண்டு மே மாதம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதன்படி, சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக தமிழைக் கூடுதல் கட்டாயப் பாடமாக்கினால் போதுமானது. தமிழ்ப் பாடத்திற்கு சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை.
தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது மோசடியானது. தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டால் தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள்.
தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல் படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






