ஊரடங்கில் தூத்துக்குடியில் 2,500 டன் கருப்பட்டி தேக்கம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 டன் கருப்பட்டி தேங்கி உள்ளது. இதனால் பனை தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கருப்பட்டி
கருப்பட்டி
Published on

தூத்துக்குடி:

தமிழகத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பனை தொழில் சிறப்பாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். உடன்குடி கருப்பட்டிக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உடன்குடி கருப்பட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பதநீர் இறக்கப்பட்டு வருகிறது. இதில் ஜூன், ஜூலை மாதங்களில் அதிக அளவில் பதநீர் இறக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் பதநீர் உற்பத்தி தொடங்கியது. படிப்படியாக பதநீர் விற்பனை அதிகரித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பனை தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பதநீர் இறக்கி வருகின்றனர். இவர்கள் அன்றாடம் பதநீரை விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். விற்பனை செய்த பதநீர் போக, மீதம் உள்ள பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது வழக்கம் போல் பதநீரை தொழிலாளர்கள் இறக்கி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக பதநீர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் கோரம்பள்ளம், வேம்பார், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்பட்டி தேக்கம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 10 கிலோ கருப்பட்டி ரூ. 2 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனையும் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் பனை தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பனை தொழிலில் நல்ல லாபம் கிடைத்தது.

இதனால் பலர் பனை தொழிலை மீண்டும் நாடி வந்தனர். தற்போது முழு ஊரடங்கு காரணமாக பதநீரை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கருப்பட்டி விலையும் குறைந்து விட்டது. ஆனாலும் வாங்குவதற்கு ஆட்கள் வர முடியாததால் தேங்கி கிடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 டன் கருப்பட்டி தேங்கி உள்ளது. இதனால் பனை தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பதநீர் விற்பனைக்கும், கருப்புக்கட்டி விற்பனைக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com