search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    X

    சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    • கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8667மில்லியன் கனஅடி ஆக உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 73 சதவீதம் ஆகும்.

    இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2632மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து 362 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3135 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பலத்த மழை பெய்தால் ஏரியில் இருந்து உபரிநீர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1872 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. 545 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 105 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 441 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 30 கனஅடி தண்ணீர் வருகிறது.

    Next Story
    ×