திருச்சியில் அரிசி விலை உயர்வு

திருச்சியில் அரிசி மூட்டைக்கு ரூ.100 வரை உயர்ந்து உள்ளது. பழைய விலை மூட்டைக்கு ரூ.1,200 என இருந்தது, தற்போது ரூ.1,300 ஆக உயர்ந்து உள்ளது.
அரிசி
அரிசி
Published on

திருச்சி:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் மளிகை, காய்கறி, எண்ணெய், பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால் அவை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அரிசி, தமிழக மக்களின் அன்றாட உணவு என்பதால் அரிசி விற்பனைக்கும் தடை இல்லை. ஊரடங்கு உத்தரவினால் ஆலைகளில் அரிசி அரவை குறைவு, தொழிலாளர் பற்றாக்குறை, மூட்டைகளை அனுப்புவதற்கு வாகன தட்டுப்பாடு போன்ற காரணங்களால் அரிசி விலை தற்போது 25 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.100 வரை உயர்ந்து உள்ளது.

திருச்சியின் அடையாளங்களில் ஒன்றானதும், மக்கள் விரும்பி சாப்பிடக்கூடியதுமான மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி (பழையது) கடந்த மாதம் ஒரு மூட்டை ரூ.1,250 முதல் ரூ.1,350 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இதன் விலை மூட்டைக்கு ரூ.100 உயர்ந்து ரூ.1,350 முதல் ரூ.1,450 வரை விற்பனை ஆகிறது. மண்ணச்சநல்லூர் பொன்னி புதியது கடந்த மாதம் ரூ. ரூ.1,050-க்கு விற்றது தற்போது ரூ.50 உயர்ந்து ரூ.1,100 ஆக உள்ளது.

கர்நாடகா பொன்னி பழையது விலையும் இதே போல் மூட்டைக்கு ரூ.100 உயர்ந்து உள்ளது. பழையவிலை மூட்டைக்கு ரூ.1,200 என இருந்தது, தற்போது ரூ.1,300 ஆக உயர்ந்து உள்ளது. கர்நாடகா பொன்னி புதியது ரூ.900-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல, ஐ.ஆர். 20 ரக அரிசி பழைய விலையான ரூ.700-ல் இருந்து ரூ.800 ஆக உயர்ந்து உள்ளது. இட்லி அரிசி விலையும் மூட்டைக்கு ரூ.50 உயர்ந்து உள்ளது. முன்பு, மூட்டை ரூ.750-க்கு விற்பனையான நயம் இட்லி அரிசி தற்போது ரூ.800 ஆக விற்கப்பட்டு வருகிறது.

அரிசி ஆலைகளில் இருந்து கடைகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்புவதற்கான ஏற்று, இறக்கு கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com