

பாராளுமன்ற மேல்சபையில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 59 எம்.பி.க்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
எம்.பி.க்களுக்கான பிரியாவிடை நிகழ்வின் போது பிரதமர் மோடி இன்று மேல்சபையில் பேசியதாவது:-
பாராளுமன்றம் ஒரு திறந்த பல்கலைக்கழகம். பல்வேறு விவகாரங்கள் குறித்து சபையில் விவாதங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தனித்துவமான பங்கை வகிக்கின்றனர். இதுபோன்ற தருணங்களில் கட்சி எல்லைகளைக் கடந்து ஒரு பொதுவான மரியாதை உணர்வு மேலோங்குகிறது.
தங்கள் பதவிக்காலம் முடிந்து சபையில் இருந்து விடைபெறும் தலைவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது. ஓய்வுபெறும் உறுப்பினர்கள் தொடர்ந்து தேசிய வாழ்வில் பங்களிக்க வேண்டும்.
தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதியையும் மேலான காலத்தை பாராளுமன்ற பணிகளிலேயே அர்ப்பணித்த மூத்த தலைவர்கள் ஆவார்கள். புதிதாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
சில சமயங்களில், சபைக்குள் நகைச்சுவைக்கும், நையாண்டிக்கும் மிகுந்த இடம் உண்டு என்று நாம் கேள்விப்படுவோம். இப்போதைய நாட்களில், ஒருவேளை அந்தப் போக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறதோ என்னவோ...
ஆனால் நம்முடைய அதாவலே மட்டும் என்றும் மாறாத புத்துணர்ச்சியுடன் திகழ்கிறார். அவர் தொடர்ந்து மிகுந்த அளவில் நகைச்சுவையையும் நையாண்டியையும் வழங்கி வருவார் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டு உள்ளேன்.
ஓய்வு பெறும் துணை தலைவர் ஹரிவன்ஷ் கண்ணியமானவர். மென்மையாக பேசக் கூடியவர். அதே நேரத்தில் கடுமையான செயல்பாடு கொண்ட மனிதர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராட்டி பேசினார்.