கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த சிறுமியின் தாயார் மரணம்

எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாயார் பாலியல் புகார் அளித்துள்ளார். எடியூரப்பா மீது பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த சிறுமியின் தாயார் மரணம்
Published on

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாஷிவநகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் எடியூரப்பா மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

17 வயது சிறுமியின் தாயாரின் புகார் அடிப்படையில் பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், புகாரளித்த சிறுமியின் தாயார் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நுரையீரல் புற்றுநோய் பிரச்சனை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துபோனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரணமடைந்த சிறுமியின் தாயார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் "நாளை எடியூரப்பாவை சந்திக்க சிறுமியின் தாயார் நேரம் கேட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தின் மீது சந்தேகம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com