

ரஷிய எரிபொருள் வாங்குவதில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பிறகு, ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் தடை விதித்தன.
இதனால் ரஷியா தனது கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் விற்கத் தொடங்கியது. அதை பயன்படுத்தி, இந்திய அரசும், இந்திய தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களும் அதிக அளவில் ரஷிய கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.
மேற்கு ஆசிய போருக்கு பிறகு அமெரிக்க மிரட்டல் காரணமாக, தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி இருந்தன. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் தடை தளர்த்தப்பட்டதால், மீண்டும் வாங்கி வருகின்றன.
'இந்நிலையில், கடந்த மே மாதத்தில் ரஷிய எரிபொருள் வாங்கிய நாடுகள் விவரத்தை எரிபொருள் மற்றும் தூய காற்றுக்கான ஆராய்ச்சி மையம் என்ற ஐரோப்பிய அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மே மாதத்தில், ரஷிய எரிபொருள் வாங்குவதில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த 2-வது இடத்தில் இந்தியா நீடிக்கிறது. சுமார் 580 கோடி யூரோ (ரூ.63 ஆயிரத்து 800 கோடி) மதிப்புள்ள ரஷிய எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்துள் ளது.
ரஷியாவில் இருந்து செய்த இறக்குமதியில் கச்சா எண்ணெயின் பங்கு மட்டும் 83 சதவீதம் ஆகும். எண்ணெய் பொருட்கள். நிலக்கரி ஆகியவை 17 சதவீத பங்கு வகிக்கின்றன.
மே மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ரஷிய இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களும் மே மாதத்தில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளன.