

பஞ்சாப் மாநில மின்சாரத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான சஞ்சீவ் அரோராவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-வான 62 வயது சஞ்சீவ் அரோரா, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகர் மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய பிறகு, சண்டிகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்தனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்திலும் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "பஞ்சாப் மக்கள் அன்புக்கு அடிபணிவார்கள், ஆனால் அவர்களை ஒடுக்க நினைத்தால் பலமாகத் திருப்பி அடிப்பார்கள்.
மோடி அவர்களே, இன்னும் நான்கு முறை கூட சோதனைகளை நடத்துங்கள். ஆனால் வரவிருக்கும் தேர்தல்களில் பாஜக தனது டெபாசிட்டை இழக்கும்."
நீங்கள் கைது செய்தவர்கள் நான்கு நாட்களில் வெளியே வருவார்கள், ஆனால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக பஞ்சாபிற்குள் நுழைய முடியாத நிலை உருவாகும்," என சாடியுள்ளார்.