

பிரதமர் நரேந்திர மோடி தனது இத்தாலி பயணத்தின்போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மெலோடி மிட்டாய் பாக்கெட் ஒன்றை பரிசளித்ததை அடுத்து, இணையத்தில் வைரலாகி வரும் “மெலோடி” டிரெண்ட் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதைத் தொடர்ந்து, பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன.
பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஒரே நாளில் 5% உயர்ந்து ரூ. 5.25-ஐ எட்டியது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் இப்பங்கு கிட்டத்தட்ட 7% உயர்ந்திருந்தது.
இருப்பினும், இதில் ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான பார்லே இண்டஸ்ட்ரீஸ், உண்மையில் மெலடி மிட்டாய்களை தயாரிப்பதில்லை.
மெலடி, பார்லே-ஜி, மொனாக்கோ, கிராக்ஜாக், மேங்கோ பைட் மற்றும் பாப்பின்ஸ் போன்ற பிராண்டுகளை தயாரிக்கும் நன்கு அறியப்பட்ட FMCG நிறுவனமான பார்லே ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. பார்லே ப்ராடக்ட்ஸ் ஒரு தனியார் நிறுவனம் மற்றும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை.
இதற்கிடையில், பார்லே இண்டஸ்ட்ரீஸ் என்பது பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும், மேலும் அதற்கும் மெலடி மிட்டாய்களுக்கும் நேரடி வணிக தொடர்பு எதுவும் இல்லை.
சில்லறை முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் 'பார்லே' என்ற பெயரை, வைரலான மெலடி தருணத்துடன் தொடர்புபடுத்தி, பார்லே என்ற பெயரை கொண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரைந்த ஒரு நிகழ்வாக இது தெரிகிறது.
பிரதமர் மோடியும் மெலோனியும் இடம்பெற்றிருந்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த டிரெண்ட் தூண்டப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், பிரதமர் மோடி மெலோனிக்கு மெலோடி மிட்டாய் பாக்கெட் ஒன்றை பரிசளிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதை, இரு தலைவர்களையும் குறிக்க இணையத்தில் பயன்படுத்தப்படும் பிரபலமான “#மெலோடி” என்ற ஹேஷ் டேகின் ஒரு விளையாட்டுத்தனமான குறிப்பாகப் பல பயனர்கள் பார்த்தனர்.
மெலோனி பின்னர் அந்தக் வீடியோவை X தளத்தில் பகிர்ந்து, “பரிசுக்கு நன்றி” என்று எழுதினார். அந்த வீடியோ விரைவாக வைரலாகி, சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக் மற்றும், கமென்ட்களையும் பெற்றது.
அந்த வீடியோ வைரலான உடனேயே, பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டன.