திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ குழு

இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.செயற்கைக்கோளை ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ISRO Team
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com