

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 90,011 பேரும், நேற்று முன்தினம் 91,020 பக்தர்களும் தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தை மதிப்பிட்ட தேவஸ்தான அதிகாரிகள் அதற்கேற்ப தரிசனத்திற்கு விரைவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, பால் மற்றும் மருத்துவ சேவைகளை அளித்து வருகின்றனர். நேற்று காலை பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் தரிசனத்திற்கு வந்தனர். அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் மலைக்குச் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றது. ஒவ்வொரு வாகனமும் அலிபிரி சோதனை சாவடியை கடக்க சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை 10,814 வாகனங்கள் திருப்பதி மலைக்கு சென்றன.
பகல் நேரத்தில் கடுமையான வெயில் காரணமாக பக்தர்கள் சிரமம் அடைந்தனர் . மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான காற்று வீசியது. இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்தனர். தரிசனம் முடிந்த பக்தர்கள் தங்களது அறைகளுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 80,455 பேர் தரிசனம் செய்தனர். 43,309 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.