

மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்குள் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மும்பை தீயணைப்பு படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகரின் கூற்றுப்படி, டெர்மினலுக்குள் இருந்த கேபிள் ட்ரேக்கள் மற்றும் ஸ்விட்ச் பாக்ஸ்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து டெர்மினலின் தரைத்தளத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன், மும்பை தீயணைப்பு படை, காவல்துறை மற்றும் வார்டு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMIA) செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், மாலை 6:10 மணிக்கு மின்கசிவு காரணமாக டெர்மினல் 1-ல் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது அவசரகால மீட்புக் குழுக்களால் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார்.
“வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2026 அன்று, மாலை 18:10 மணிக்கு மின்கசிவு காரணமாக டெர்மினல் 1-ல் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ, சில நிமிடங்களுக்குள் அவசரகால மீட்பு குழுக்களால் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை,” என்று CSMIA செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல காணொளிகளில், விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்குள் அடர்த்தியான புகை சூழ்ந்திருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது. தரைத்தளம் மற்றும் 01 தளங்களைக் கொண்ட டெர்மினல் கட்டமைப்பின் தரைத்தள மின் உற்பத்தி நிலையத்தில், கூரை மட்டத்திலான மின் தட்டு, மின் வயரிங், மின் கேபிள்கள், மின் நிறுவல்கள் மற்றும் மின் பலகைகள் ஆகியவற்றில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.