

நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தால் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா கார்கி நீடித்து வந்தார்.
இந்த சூழலில் புதிய அரசை தேர்தெடுத்தப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேபாள நாட்டின் 47வது பிரதமராக 35 வயதேயான பாலேந்திர ஷா இன்று (மார்ச் 27) பதவியேற்றார்.
அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள திரு. பலேந்திர ஷா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தங்கள் நியமனமானது, நேபாள மக்கள் தங்கள் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
நமது இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில், இந்தியா-நேபாள நட்புறவையும் ஒத்துழைப்பையும் இன்னும் உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டுசெல்ல, தங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.