டெல்லி ஓட்டல் தீ விபத்து: 21 பேர் உயிரிழந்த வழக்கில் கட்டிட உரிமையாளர் கைது

"நகரம் முழுவதும் ஓட்டல்கள், மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வணிகக் கட்டிடங்களில் ஒரு மாத கால தீ பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்து"
Building Owner Arrested in Case Involving 21 Deaths
Published on

புதுடெல்லியின் மால்வியா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஓட்டல் மற்றும் உணவக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்டிட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பலர் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

உயிர் தப்புவதற்காக சிலர் மேல்தளங்களிலிருந்து குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் மருத்துவ அவசர சேவைகள் இணைந்து செயல்பட்டன. விபத்தில் உயிரிழந்த 21 பேரில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணையில், சம்பவம் நடந்த ஓட்டல் தேவையான தீயணைப்பு பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இதனால், பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தீ விபத்துக்குப் பிறகு லவ்கேஷ் பஜாஜ் தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரை கண்டுபிடிக்க 'லுக் அவுட் சர்குலர்' (LOC) வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அலட்சியம் மற்றும் மனித உயிரிழப்புக்கு காரணமான குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் சர்தார் தரன்ஜித் சிங் சந்து, நகரம் முழுவதும் ஓட்டல்கள், மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வணிகக் கட்டிடங்களில் ஒரு மாத கால தீ பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com