

கேரளாவில் தேர்தல் ஆணையம் அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றில், கேரள மாநில பாஜகவின் முத்திரை இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 19 ஆம் தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றில், ஆணையத்தின் முத்திரைக்குப் பதில் பாஜகவின் முத்திரை இருந்ததை சிபிஎம் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
அந்த பதிவில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் பாஜகவையும் ஒரே சக்திதான் இயக்குகிறது என்பது ரகசியமல்ல.
அப்படி இருந்தாலும், குறைந்தபட்சம் தனித்தனி மேஜைகளையாவது பயன்படுத்துங்கள். எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னம் வரும் என்பது போல, இதுவும் ஒரு தற்செயலான நிகழ்வா?" என்று சிபிஎம் கேள்வி எழுப்பி உள்ளது.
அதேநேரம் கேரள மாநில காங்கிரசும் இதை விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது.
இது ஒரு துரதிர்ஷ்டவசமான "எழுத்துப் பிழை" (Clerical Error) என்றும், தவறுதலாக பாஜகவின் முத்திரை பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் தவறு உடனடியாகச் சரி செய்யப்படும் என்றும் ஆணையம் உறுதியளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் பாஜகபுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும், அந்த கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் இத்தகைய குளறுபடிகள் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.