

இந்தியாவில் பாகிஸ்தான் என்ற பெயரையோ அல்லது பாகிஸ்தானில் இந்தியா என்ற பெயரையோ குறிப்பிடும்போது பலருக்கும் பலவிதமான சிந்தனைகள் உள்ளே எழலாம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை, அரசியல் சொல்லாடல்களில் தொடங்கி விளையாட்டுத் துறை வரை பிரதிபலிக்கிறது. இந்த பகைமை எண்ணம் இருநாட்டிலும் உள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் இருக்குமா என்றால் இல்லை.
நாட்டின் உயரிய பொறுப்புகளில் அதாவது தலைமையின் செயல் அப்படியே மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காது என்பதே நிதர்சன உண்மை.
அதனை நிரூபிக்கும் வகையில் ஓமனில், தன் உயிரை பணயம் வைத்து இரு இந்தியர்களை காப்பாற்றியுள்ளார் பாகிஸ்தானியர் ஒருவர். அவரின் இந்த செயல் பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமனில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளையும் சூழ்ந்தது.
அப்போது பர்கா பகுதி அருகே இரு இந்தியர்கள் பயணித்த கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இதனை அங்கு சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்த்தநிலையில், ஷாஜாத் கான் சற்றும் தயங்காமல் வெள்ளத்தில் இறங்கி, காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த இருவரையும் வெளியே இழுத்து காப்பாற்றினார்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவர், "அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நான் யோசிக்கவில்லை. என் கண் முன்னே இரு மனித உயிர்கள் ஆபத்தில் இருந்தன, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது" என தெரிவித்துள்ளார்.