குஜராத்தில் காங்கிரஸ் வாக்கு அதிகரித்துள்ளது: முதல்வர் நாராயணசாமி பேட்டி

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில நிருபர்களிடம் கூறியுள்ளார்.
குஜராத்தில் காங்கிரஸ் வாக்கு அதிகரித்துள்ளது: முதல்வர் நாராயணசாமி பேட்டி
Published on

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தான் பிரதமர் என்பதை மறந்து குஜராத்திலேயே முகாமிட்டு 32 கூட்டங்களில் பேசி பிரசாரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் அவரை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால் ராகுல்காந்தி தனியாக நின்று பிரசாரம் செய்து காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளனர்.

புதுவை அமைச்சர்கள் விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதுவும் முதல் வகுப்புகளில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கூறுகிறார். இது அவரது வேலையில்லை. புதுவையில் வருமானத்தை பெருக்குவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். அதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர் விமானத்தில் செல்கிறாரே. அவரை யார் கேட்பது?

புதுவை கவர்னர் அலுவலகத்தில் 22 பேர் தான் வேலை செய்ய வேண்டும். ஆனால் 64 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டுமா? மற்றவர்களை குறை சொல்லும் முன்பு அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கவர்னர் ஆய்வு பணியில் ஈடுபடுகிறார். கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும் என எந்த ஒரு விதிமுறையும் கிடையாது. அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது.

ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பா.ஜனதா புறவாசல் வழியாக கவர்னரை நியமித்து மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுகிறது. ஒரு கவர்னர் தன்னிச்சையாக உத்தரவு போடக்கூடாது. ஆய்வு செய்யக்கூடாது. கையெழுத்து மட்டுமே போட வேண்டும். இது ஜனநாயக படுகொலை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com