பாராளுமன்ற தேர்தலில் மோடியை மக்கள் நிராகரிப்பார்கள்- இளங்கோவன் பேட்டி

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவையும் பிரதமர் மோடியையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்று இளங்கோவன் பேசியுள்ளார். #elangovan #parliamentaryelection #pmmodi
பாராளுமன்ற தேர்தலில் மோடியை மக்கள் நிராகரிப்பார்கள்- இளங்கோவன் பேட்டி
Published on

ஈரோடு:

ஈரோடு காங்கிரஸ் முதலாவது மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதலாவது மண்டல தலைவர் அயுப்அலி தலைமை தாங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் முன்னிலை வகித்தார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பொதுச்செயலாளர் அருள் பெத்தையா ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எச்.ஐ.வி.தோற்று உள்ள ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது போல் வேறு சில பெண்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகின்றன. ஆனால் இந்நாள் வரை சுகாதாரத் துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேச வில்லை.

இந்த வி‌ஷயத்தில் அவர் அலட்சியமாக செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசையும், மத்திய மந்திரிகளையும் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

கஜா புயல் நிவாரணத்திற்காகவோ, தமிழக மக்கள் நலனுக்காகவோ அவர்கள் சந்திக்கவில்லை. தேசிய அளவில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசோ மாநில அரசோ அவர்களை கண்டு கொள்ளவில்லை.

தமிழகத்தில் தற்போது உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தமிழக அரசு சார்பில் அதிகாரிகளோ அமைச்சர்களோ நேரில் சந்தித்து இதுவரை பேசவில்லை.

ஆனால் காங்கிரஸ் விவசாயிகள் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

ஆனால் 4½ ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் மோடி இதுவரை விவசாயிகளுக்காக செய்தது என்ன? 41 முறை அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதன்மூலம் ரூ. 2,500 கோடி வரை செலவாகியுள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா நிச்சயம் அதற்கான விளைவுகளை சந்திக்கும். பாரதீய ஜனதாவையும் பிரதமர் மோடியையும் மக்கள் நிராகரிப்பார்கள் பாரதீய ஜனதா படுதோல்வி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார். #elangovan #parliamentaryelection #pmmodi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com