search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகசாமி ஆணையத்திடம் சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் நல்ல சான்றிதழ் கொடுத்தார்- ஜெயக்குமார் கடும் கண்டனம்
    X

    ஆறுமுகசாமி ஆணையத்திடம் சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் நல்ல சான்றிதழ் கொடுத்தார்- ஜெயக்குமார் கடும் கண்டனம்

    • எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 மாதத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார்.
    • அந்த குற்றவாளிகள் கேரளா, கர்நாடகாவில் கொடும் குற்றங்கள் புரிந்தவர்கள்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அம்மா கட்டிக்காத்த நெறிமுறைகளின்படி முறையாக நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒற்றை தலைமை வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என ஒருமித்த குரலில் ஒலித்தனர்.

    நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சட்டப்படியும், எம்.ஜி.ஆர். வகுத்து தந்த சட்ட விதிமுறைகளின் படியும் பொதுக்குழு நடைபெற்றது.

    அ.தி.மு.க. சட்டத்திட்ட நெறிமுறைகள்படி எங்கள் பக்கம் முழுமையான நியாயம் இருக்கும் நிலையில் நிச்சயமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும். மேலும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி பேசக்கூடாது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 மாதத்தில் கொடநாடு சம்பவம் தொடர்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார். அந்த குற்றவாளிகள் கேரளா, கர்நாடகாவில் கொடும் குற்றங்கள் புரிந்தவர்கள்.

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களை காவல்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி விரைந்து கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தினார். அவர்களை தி.மு.க. தான் ஜாமினில் எடுத்தது.

    சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் எந்த நிலையிலும் கட்சியில் வரக்கூடாது. அம்மாவின் மரணத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார்.

    ஆனால் டி.டி.வி.தினகரனை, ஓ.பன்னீர் செல்வம் மறைமுகமாக சந்தித்தார். அம்மாவின் மரணம் குறித்து ஒரு உண்மை நிலையை தெரிய வேண்டும் என்பதற்காக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அமைத்தார். ஆனால் அந்த ஆணையத்தில் சென்று சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் நல்ல சான்றிதழ் அளிக்கிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார். அதன் பிறகு அம்மாவின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கும் போது அர்ப்பணிப்போடு முதல்-அமைச்சர் செயல்படுகிறார் என்ற கருத்தை முன்மொழிந்தார். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும் என்று தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    தி.மு.க. எதிர்ப்பு கொள்கையை கட்சிக்காரர்களுக்கு ஊட்டி வாழ்நாளெல்லாம் கடைபிடித்தார். புரட்சி தலைவியும் வாழ்நாள் முழுவதும் தி.மு.க. எதிர்ப்பு கொள்கையை எடுத்தார். அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக ரவீந்தரநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×