

ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை, சுத்தமல்லி, பூவந்திகொல்லை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது சுத்தமல்லி நீர் தேக்கம். இதில் உள் பகுதிகள் காடுகளாக இருப்பதால் மான், மயில், பறவைகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் காலை நெல் கொள்முதல் நிலையம் அருகே பெண் புள்ளி மான் ஒன்றை நாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறியதை கண்ட பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு உள்ளனர். பின்னர் அந்த மானை மீட்டு பொதுமக்கள் பார்த்த போது மானில் உடலில் பல இடங்களில் நாய்கடி காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.இது குறித்து தா.பழூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அங்கு வருவதற்குள் மான் பரிதாபமாக இறந்தது. உயிரிழந்த மானின் உடலை அங்கே உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறையினர், அதன் பின்னர சுத்தமல்லி வனப்பகுதியில் புதைத்தனர்.