search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகர பஸ்களில் சில்லரையை சிதறவிட்டு ஆந்திர பெண்கள் கைவரிசை
    X

    மாநகர பஸ்களில் சில்லரையை சிதறவிட்டு ஆந்திர பெண்கள் கைவரிசை

    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
    • கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர் நகர், குண்டலகேசி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். மாநகர பஸ் கண்டக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜ லட்சுமி. இவர் கடந்த மாதம் 23ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பின்னர் தான் அணிந்திருந்த 18பவுன் நகைகளை கழட்டி கைப்பையில் போட்டுக் கொண்டு கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ் (தடம் எண்70வி) மூலம் வீடு திரும்பினார்.

    ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய ராஜலட்சுமி நகைகளுடன் தனது கைப்பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை சுருட்டி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்மு போலீஸ்காரர் விக்ரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்பேடு முதல் வண்டலூர் வரை உள்ள மாநகர பஸ் நிறுத்தங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகை கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விமலா (30) என்பது தெரிந்தது. வேலூரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விமலா கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களை குறிவைத்து கொள்ளை அடிப்பவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவரை போன்று மேலும் பல பெண்கள் பஸ்களில் கைவரிசை காட்டுவதற்காக சென்னை மாநகருக்குள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கூட்ட நெரிசலில் சில்லரையை சிதறிவிட்டு கவனத்தை திசை திருப்பி இந்த பெண்கள் கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விமலா வும் சில்லரையை சிதற விட்டுத்தான் நகையை அபேஸ் செய்துள்ளார்.

    இவரைப் போன்று ஆந்திராவை சேர்ந்த 6 பெண்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாகவும், எனவே மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஆந்திராவில் இருந்து ஒன்றாக புறப்பட்டு சென்னைக்கு வரும் இவர்கள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று கைவரிசை காட்டு வார்கள். காலையில் இருந்து இரவு வரையில் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்று விடுவார்கள்.

    விமலாவை போன்று சென்னை மாநகர பஸ்களில் கைவரிசை காட்டிவரும் மற்ற பெண்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×