மாரடைப்பு-ஒரு நிமிட தாமதம் கூட உயிருக்கு ஆபத்து! உங்கள் இதயம் சொல்லும் எச்சரிக்கை என்ன?

மார்புவலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.
Heart Attack-CARDIAC ARREST
Published on

மாரடைப்பு என்பது உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் முதன்மையான ஒன்றாகும். இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி தமனிகள் அடைபடும்போது, இதயத் தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவை சேதமடைகின்றன. இந்த நிலையே மாரடைப்பு எனப்படுகிறது.

முன்பு 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாகக் காணப்பட்ட இந்த நோய், தற்போது 25-40 வயதுடைய இளைஞர்களிடமும் அதிகரித்து வருகிறது. மனஅழுத்தம், தவறான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாமை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இதயம் எவ்வாறு செயல்படுகிறது?

இதயம் ஒரு சக்திவாய்ந்த தசை உறுப்பாகும். இது தினமும் சுமார் 1 லட்சம் முறை துடித்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை அனுப்புகிறது. இதயத்திற்கே ரத்தத்தை வழங்குவது கரோனரி தமனிகள். இவற்றில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் கால்சியம் படிந்து அடைப்பு ஏற்பட்டால், ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:

1. அதிக கொலஸ்ட்ரால்-

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் தமனிகளில் கொழுப்பு படியும்.

2. உயர் ரத்த அழுத்தம்-

தொடர்ந்து உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும்

3. சர்க்கரை நோய்-

சர்க்கரை நோய் ரத்த நாளங்களை சேதப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

4. புகைப்பிடித்தல்

புகை பிடிப்பதால் ரத்த நாளங்கள் சுருங்கி, ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால், ரத்த உறைவு உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

5.மது அருந்துதல்-

அளவுக்கு அதிகமான மது இதய தசைகளை பலவீனப்படுத்தும்.

6. உடல் பருமன்-

BMI அதிகமாக இருந்தால் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும்.

7. உடற்பயிற்சி இல்லாமை-

நாள்தோறும் உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்.

8. மனஅழுத்தம்-

அதிக கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவை இதயத்தின் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

9. மரபணு-

குடும்பத்தில் பெற்றோர் அல்லது உடன்பிறந்தோருக்கு இளம் வயதில் மாரடைப்பு இருந்தால் அபாயம் அதிகம்.

ஆண்களுக்கு மாரடைப்பு ஏன் அதிகம்?

40-60 வயதில் ஆண்களுக்கு பெண்களை விட அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதிக வேலைப்பளு, மனஅழுத்தம், அதிக கொழுப்பு உணவுகள் உட்கொள்வது போன்ற காரணங்களால் ஆண்களுக்கு அதிகப்படியாக மாரடைப்பு ஏற்படுகிறது.

பெண்களுக்கு மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது?

மாதவிடாய் நிற்கும் வரை பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், மாதவிடாய் நின்ற பிறகு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் உயரும், சர்க்கரை நோய் அபாயம் அதிகரிக்கும் இதனால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.

பெண்களிடம் காணப்படும் வித்தியாசமான அறிகுறிகள்:

*அதிக சோர்வு

*வாந்தி

*செரிமானக் கோளாறு

*கழுத்து வலி

*முதுகு வலி

*மூச்சுத்திணறல்

இதனால் பல பெண்கள் மாரடைப்பை ஆரம்பத்தில் அடையாளம் காண முடியாமல் போகிறது.

மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள்:

*மார்பின் நடுவில் கடுமையான அழுத்தம் அல்லது வலி

*இடது கை, தோள், கழுத்து அல்லது தாடைக்கு பரவும் வலி

*மூச்சுத்திணறல்

*அதிக வியர்வை, வாந்தி

*தலைச்சுற்றல், மயக்கம், திடீர் பலவீனம்

அமைதியான மாரடைப்பு:

சிலருக்கு, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு, கடுமையான மார்பு வலி இல்லாமல் மாரடைப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்:

*சோர்வு

*மூச்சுத்திணறல்

*அதிக வியர்வை

*லேசான மார்பு அசவுகரியம்

மாரடைப்பு எவ்வளவு ஆபத்தானது?

சிகிச்சை தாமதமானால், இதயத் தசைகள் நிரந்தரமாக சேதமடைந்து, இதய செயலிழந்து, இதயத் துடிப்பு சீர்கேடின்றி திடீர் உயிரிழப்பு ஏற்படும். முதல் 60-90 நிமிடங்கள் "Golden Hour" மிகவும் முக்கியமானவை.

மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

1. உடனடியாக அவசர மருத்துவ சேவையை அழைக்கவும்.

2. நோயாளியை அமைதியாக உட்கார அல்லது சாய்ந்து ஓய்வெடுக்கச் செய்யவும்.

3. இறுக்கமான ஆடைகளை தளர்த்தவும்.

4. மருத்துவர் முன்பே பரிந்துரைத்திருந்தால் மட்டுமே அவசர மருந்துகளை பயன்படுத்தவும்.

5. மருத்துவ உதவி வரும் வரை நோயாளியை தனியாக விடாதீர்கள்.

6. மூச்சு மற்றும் இதயத் துடிப்பு நின்றால், பயிற்சி பெற்றவர் உடனடியாக CPR தொடங்க வேண்டும்.

7.தானாகவே வாகனம் ஓட்டி மருத்துவமனைக்கு செல்ல முயற்சிக்க வேண்டாம்.

மாரடைப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

*தினமும் 30-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி.

*புகைப்பிடித்தல் மற்றும் மதுவைத் தவிர்க்கவும்.

*உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.

*உப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை அளவோடு பயன்படுத்தவும்.

*ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை முறையாக பரிசோதிக்கவும்.

*மனஅழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளவும்.

*மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை என்றாலும், பெரும்பாலான அபாய காரணிகளை வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். சீரான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, புகைப்பிடித்தல் மற்றும் மதுவைத் தவிர்த்தல், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தல் ஆகியவை இதயத்தைப் பாதுகாக்கும் முக்கியமான வழிமுறைகள்.

மார்புவலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது உயிரைக் காப்பாற்றும் மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com