அது என்ன...? கண்ணாடி தியானம்! சரி பார்க்கலாம் வாங்க....

கண்ணாடியை பலரும் பல வகைகளில் பயன்படுத்துவார்கள்.உரையாட முகக்கண்ணாடியை பயன்படுத்துவதே கண்ணாடி தியானம்.
அது என்ன...? கண்ணாடி தியானம்! சரி பார்க்கலாம் வாங்க....
Published on

கண்ணாடியில் முகம் பார்ப்பது, ஒப்பனை செய்வது, உடைகளை சரி செய்வது, அணியும் உடை உடலுக்கு ஏற்றவாறு, தமக்கு பிடித்தவாறு இருக்கிறதா என அழகு பார்ப்பது.. இப்படி முகம் பார்க்கும் கண்ணாடியை பலரும் பல வகைகளில் பயன்படுத்துவார்கள்.

அதோடு சேர்த்து உடலோடும், மனதோடும் உரையாட முகக்கண்ணாடியை பயன்படுத்துவதே கண்ணாடி தியானம். அதனை ஏன் செய்ய வேண்டும்? எவ்வாறு செய்வது? அதனை செய்வதால் என்ன பயன் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போமா!

இன்றைய தொழில் நுட்ப உலகில் நம்மில் பலர், உடலையும், உணர்வுகளையும் கவனிக்காமலே ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் பல நேரங்களில் நமது வாழ்க்கை நோக்கத்தை மறக்கிறோம்.

ஒருகட்டத்தில் வாழ்க்கை மீது விரக்தி ஏற்படும்போது, `ஏன் பிறந்தேன்? ஏன் இந்த வாழ்க்கை?' போன்ற பல கேள்விகளை கேட்கிறோம். அதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த கண்ணாடி தியானம் அமையும்.

`நாம் மற்றவர்களின் முகங்களைப் பார்க்கும் போது நம்மில் எழுகின்ற உணர்வுகள், உணர்ச்சிகள், அறிவாற்றல் சார்ந்த மூளை வழிசெயல்பாடுகள், நாம் நமது முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது நிகழ்கின்றன' என்று நரம்பியல் உளவியலின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆக, நம்மை நாம் கண்ணாடியில் பார்க்கிறபோது எங்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, எந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் மறைக்க முடியாது. நாம் சுயத்தோடு இருக்கும் போது உண்மையாக இருப்போம். நமது உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் பார்க்க முடியும்.

நாம் சென்று கொண்டு இருக்கும் பாதை சரியானதா, நாம் மகிழ்ச்சியாய் உள்ளோமா என நம்மை நாமே சுய ஆய்வு செய்ய முடியும். அப்போது நம்மில் பல உணர்வுகளும், பல சிந்தனைகளும், நமது கடந்த கால நினைவுகளும் எழும். அப்போது எது குறித்தும் பயப்பட வேண்டாம்.

நிறை குறைகளோடு நமது இயல்பை ஏற்றுக்கொள்ளும் போது நம்மிடம் நம்பிக்கை ஏற்படும். எல்லாவற்றையும் கடந்து வாழ்க்கை பயணத்தில் ஈடுபட ஆற்றல் கிடைக்கும். இதுவே கண்ணாடி தியானத்தின் ஆற்றலாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com