search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?: மருத்துவ நிபுணர்கள் கருத்து
    X

    கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?: மருத்துவ நிபுணர்கள் கருத்து

    • உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் சரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
    • புதிதாக உடற்பயிற்சி செய்ய விரும்பும் நபர் தனக்கான வழிகாட்டியை சரியாக தேர்வு செய்வது அத்தியாவசியமானதாகும்.

    உடற்பயிற்சி...

    என்ற வார்த்தையை கேட்கும் போதே சிலருக்கு அளவு கடந்த உற்சாகமும், சிலருக்கு சிறிதளவு தயக்கமும் உண்டாகும். ஏனெனில் உடலை மேம்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் அதனை அடையும் பொருட்டு சிலர் அதற்கான வழிமுறையை சரியாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக உடலில் சிறு காயங்கள் முதல் எலும்பு முறிவு உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகளும் உண்டாகின்றன. சில நேரங்களில் இதனால் உயிரிழப்பும் நடந்து வருவது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகவே உள்ளது.

    ஆம்... தற்போது முறையான வழிகாட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் தனது உடல் நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை எடுத்து கொள்ளாமல் சிலர் உயிரிழப்பை சந்திக்கின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது நாட்டின் அனைத்து மக்களிடமும் பேசு பொருளாகியது. இந்த இறப்புக்கு காரணம் என்னவென்று ஆராயும் போது, அவர் சரியான தூக்கமில்லாது உடற்பயிற்சி மேற்கொண்டதன் விளைவாக இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    இதேபோல் சமீபத்தில் கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த ஆணழகன் போட்டிக்கு சென்ற சேலத்தை சேர்ந்த ஹரிகரன் என்ற 21 வயது வாலிபர், பயிற்சி எடுத்த நில நிமிடங்களில் திடீரென மரணம் அடைந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் கட்டுடல் கொண்டுவருவதற்காக 'ஸ்டீராய்டு' ஊசி பயன்படுத்தியதால் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

    உடற்பயிற்சி செய்யும் போது இப்படி உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என்ன?... தற்போதைய சூழலில் இது தொடர் கதையாகி வருவது ஏன்? என்பது குறித்து உடற்பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    உணவு பழக்கம்

    சிதம்பரத்தை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ரஞ்சித்: உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் சரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் முன் எத்தகைய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்திருக்க வேண்டும். எந்தெந்த நேரங்களில் எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த உணவில் சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பாடி பில்டிங்கில் ஒரு பகுதி தான் ஸ்டீராய்டு, இருப்பினும் அதனை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிலர் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் வீடியோவை பார்த்து உடற்பயிற்சி மேற்கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்வதால் எவ்வித விளைவுகளும் ஏற்படாது. மேலும் குறிப்பிட்ட வயதை எட்டும் போது இதயத்தில் ரத்த ஓட்டத்தின் செயல்பாடு 8 சதவீதம் குறைகிறது. உடற்பயிற்சி செய்யும் போது நீரிழிவு, ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. உடற்பயிற்சி நிலையத்தில் தகுந்த அனுபவம் உள்ள பயிற்சியாளர்களிடம் கற்க வேண்டும். மேலும் அவர்கள் உடலில் ஏதேனும் நோய்கள் அல்லது குறைபாடுகள் இருப்பின் பயிற்சியாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

    மன அழுத்தம்

    விருத்தாசலத்தை சேர்ந்த தமிழ்நாடு ஜம்ப் ரோப் விளையாட்டு சங்க மாநில பொது செயலாளர் கமலேஸ்வரன்: கடின உடற்பயிற்சி ஆபத்தை விளைவிக்கலாம் என்பது எனது கருத்து. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறி உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அதனால் நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தேவைக்கு அதிகமாக இருப்பது, தேவையற்றதாக மாறிவிடும். தேவையற்றதாக மாறும்போது அது கழிவாக பார்க்கப்படும். அதிலும் பயன்தரா கழிவாக மாறும். பயன்தரா கழிவு நமக்கு ஆபத்தை விளைவிக்கும். இளம் வயதில் செய்யும் உடற்பயிற்சி, முதுமையில் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவுகிறது. இதுவே கடின உடற்பயிற்சி முதுமை வரை கூட காத்திருக்க தேவையில்லை. அதற்கு முன்பே நம்மை உற்சாகமின்றி சோர்வாகவே வைத்திருக்கும். தசைகள் மிகவும் கடினமானதாக மாறலாம், அது நம்மை சுறுசுறுப்பாக இருக்க அனுமதிக்காது. இது மனதை பாதிக்கலாம். நாளடைவில் மன அழுத்தமாகவும் மாறலாம். மன அழுத்தம் தவறான விளைவை ஏற்படுத்தும்.

    ஆபத்தை உருவாக்கும்

    நெல்லிக்குப்பம் உடற்பயிற்சியாளர் மணிகண்டன்:- உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும், ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும், உடல் கட்டமைப்பில் சாதிக்க வேண்டும் என இப்படி வெவ்வேறு காரணங்களை கொண்டு பலர் ஜிம்மிற்கு வருகின்றனர். இதேபோல் மருத்துவரின் அறிவுரையின் பேரிலும், சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உடல் கட்டுக்கோப்பில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவும் சிலர் வருவதுண்டு. இதில் பெரும்பாலானோர் ஜிம்மிற்கு சென்றவுடன் உடல் கட்டமைப்பு வந்து விடும் என்று கருதுகின்றனர். மேலும் அதனை தமது சிந்தனையில் வலுவாக விதைத்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளா மல் ஜிம்மிற்கு வந்த ஆரம்பம் முதலே அதிகப்படி யான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இப்படி செய்யும் போது அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எந்த ஒரு செயலுக்கும் வழிகாட்டுதல் என்பது அவசியமான ஒன்று. ஏனெனில் வழிகாட்டுதல் இல்லாத செயல் நமக்கு ஆபத்தை உருவாக்கக்கூ டும். அதுபோல தான் உடற்பயிற்சியிலும்.

    புதிதாக உடற்பயிற்சி செய்ய விரும்பும் நபர் தனக்கான வழிகாட்டியை சரியாக தேர்வு செய்வது அத்தியாவசியமானதாகும். ஜிம்மில் சேர விரும்பும் நபர் தமக்கு பயிற்சி அளிக்கும் நபரின் அனுபவத்தையும், அவரது திறனையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் மூலம்தான் சரியான உடற்பயிற்சியை பெற முடியும். இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

    இதய பரிசோதனை

    இதுகுறித்து கடலூரை சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், இன்றைய தலைமுறை இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொள்கின்றனர். அதில் முறையான பயிற்சி இன்றி ஒருவர் திடீரென உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அதிகப்படியான எடையை தூக்கினால் உடனே அவருக்கு இதய துடிப்பு அதிகமாகி திடீர் இதய இறப்பு (சடன் ஹார்டியாக் டெத்) ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிலருக்கு பெமிலியல் ஹைப்பர் கொலஸ்ட்ரால் லிமியா என்ற இதய வால்வுகளில் கொழுப்பு படிதல் இயற்கையாகவே இருக்கும். அந்த சமயங்களில் உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று அதிக எடையை உடனே தூக்கும்போது அதிகப்படியாக அழுத்தத்தால் ரத்த குழாய் கொழுப்பு அடைப்பானது திடீரென வெடித்து விடும். இதனால் கூட மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உடற்பயிற்சிக்கு செல்லும் முன்பு இதய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    Next Story
    ×