search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருப்பதி ஏழுமலையான் கோவில்
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவில்

    • வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள்.
    • கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது.

    மூலவர் - வெங்கடாசலபதி

    உற்சவர் - மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர்

    தாயார் - பத்மாவதி

    தல விருட்சம் - புளிய மரம்

    தீர்த்தம் - சுவாமி புஷ்கரிணி

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்.

    சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு 'ஏழுமலையான்' என்றொரு திருநாமம்.

    திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.

    வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

    வரலாறு

    உலகில் துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது.

    பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.

    பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார்.

    பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, "பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது" எனச் சபித்துவிட்டு, கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

    அங்கே, சிவனும் பார்வதியும் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. "பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்" என்று சபித்தவர், வைகுண்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை.

    குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா? பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான்.

    பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.

    திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.

    அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது.

    பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள் ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார்.

    அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.

    தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.

    யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு "பத்மம்" என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.

    ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள்.

    சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது, கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே! அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.

    சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.

    கோவில் அமைப்பு

    திருப்பதி ஏழுமலையான் கோயில் மூன்று பிரகாரங்களை கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் இசுலாமியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது.

    திருப்பதி கோயிலின் "முதல் பிரகாரம்" சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன.

    விமான பிரதட்சண பிரகாரம் என்பது "இரண்டாவது பிரகாரம்". இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன.

    "மூன்றாவது பிரகாரம்" வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.

    மூலவர்

    மூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் இருப்பவர். திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? வெறுங்கை வேடன்!

    பிரகார தெய்வங்கள்

    வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார்.

    வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.

    கோவிலின் சிறப்பு அம்சம்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

    திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் 'ஆனந்த நிலையம்'. பெயருக்கு ஏற்ப வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர்களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

    ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. இதுதவிர மார்கழி மாத அர்சனைக்கும் வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.

    சிவராத்திரி அன்று திருப்பதியில் 'க்ஷேத்ர பாலிகா' என்ற உற்ஸவம் நடைபெறுகிறது. அன்று உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும்.

    எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

    ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

    திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.

    உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50,000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

    திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும், அந்த விக்கிரகத்தில் ஏதேனும் ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. அது மட்டுமா? எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்.

    ஆனால் திருவேங்கடவனின் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. திருப்பதி ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்ட உண்மையான நகைபோன்று மின்னுவது அற்புதம்தான்!

    கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில்.அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள்.

    ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

    திருப்பதி ஏழுமலையான் திருமேனிக்குப் பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை இரசாயனம். இக்கற்பூரம் அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம் ஆகும். இந்த பச்சைக்கற்பூரத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், ஏழுமலையான் திருமேனிக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

    திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவது இல்லை. ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட மண் சட்டியும், தயிர் சாதமும் பிரசாதமாகக் கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

    திருவிழாக்கள்

    வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவப் பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது! வெங்கடேஸ்வரர் சர்வ அலங்கார பூஷிதராக நான்மாடவீதிகளில் தேர் பவனி வருகிறார்.

    புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம்! இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலையில் வந்து குவிகின்றனர்.

    Next Story
    ×