

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. ஆனால் இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் கடந்த 19 அன்று வெளியாகி ரூ.1000 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் மோடி பிரதமராக பதவி ஏற்பது, பணமதிப்பிழப்பை அறிவிப்பது ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது பாகிஸ்தானிடம் இந்திய ரூபாய் நோட்டுக்களை அடிக்கும் அச்சுகள் கிடைத்து கள்ளநோட்டு புழக்கம் இந்தியாவில் அதிகரித்த நிலையில் அதை தடுக்கவே பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததாக படத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், துரந்தர் 2 படத்தில் இடம்பெற்ற பணமதிப்பிழப்பு தொடர்பான காட்சிகளை இயக்குநர் வெற்றிமாறன் விமர்சித்துள்ளார்.
நீளிரா பட நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "இன்றைக்கு எல்லாமே Propaganda-வாக மாறுகிறது. அந்த Propaganda நினைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. நினைவுகள் என்பது நிலையற்றது. நம் எல்லாருக்குமே தெரியும் Demonetisation-னில் யார் அதிகம் பாதிக்கப்பட்டது என்று எவ்வளவு பேர் பணத்தை பெற வரிசையில் நின்று செத்து போனார்கள் என தெரியும். ஆனால் அந்த தாக்கத்தை எளிமையாக மாற்ற முடிகிறது. அவதூறு பிரசாரத்துக்கு எதிராக நாம் செய்ய வேண்டியது இது போன்ற படங்களை எடுப்பது. அதன் மூலம் நம் நினைவுகளை சரியான வகையில் வடிவமைக்க உரையாடலை உயிர்போடு வைத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.