

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்று இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கேள்வி: இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறீர்கள். ஒரு சக நடிகராக ‘ஜன நாயகன்’ படம் முடக்கப்பட்டதற்கு உங்களது கருத்து என்ன?
ப: சாரி. நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: மூத்த நடிகராக இருந்து வருகிறீர்கள். இப்போதுள்ள இளைஞர்கள், நடிகர்கள் மீது ரொம்ப ஆர்வத்துடன் அவர்கள் செல்லும் வாகனத்தை பின் தொடர்கிறார்கள். நிறைய பேர் கீழே விழுந்து அடிப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு மூத்த நடிகராக இது போன்ற இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அடிப்பட்டால் அவர்களுக்குதானே காயம் ஏற்படும். படிக்கிற வயதில் முதலில் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டு விட்டால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும். படிப்பில் மட்டும் தான் அவர்களது சிந்தனை, செயல் இருக்க வேண்டும். முதலில் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது. இந்த பழக்கத்தினால் வாழ்க்கையே கெட்டு போய் விடும். அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களது தாய், தந்தை, குடும்பத்தினர் வாழ்க்கையும் நரகமாகி விடும். கெட்ட பழக்கம் உடைய நண்பர்களிடம் சேராமல் அவர்களை விட்டு தூரமாக இருக்க வேண்டும். ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2, 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி பட தயாரிப்பு நிறுவனம்தான் வெளியிடும். நானும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.