இந்தியா
null

கரூர் நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி - யார் இந்த அஜய் ரஸ்தோகி?

Published On 2025-10-13 12:11 IST   |   Update On 2025-10-13 12:25:00 IST
  • உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது
  • ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் ரஸ்தோகி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர்.

2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக் காலத்தில், ரஸ்தோகி 158 வழக்குகளை விசாரித்துள்ளார். குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும், திருமணத்தை மீறிய உறவுகளை குற்ற மற்றதாக்குதல், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாகவும் பல முக்கிய தீர்ப்பு அஜய் ரஸ்தோகி வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News