இந்தியா

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Published On 2024-05-04 04:18 GMT   |   Update On 2024-05-04 04:18 GMT
  • மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.
  • இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமானது.

திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதனால், கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. மாட வீதிகள் அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், மாடவீதிகள், நாராயணகிரி பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனுமன் ஜெயந்தி உற்சவம் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த மாணவி ஒருவர் 10 லட்சத்து ஆயிரத்து 116 கோவிந்த நாமங்களை பக்தியுடன் எழுதிக் கொண்டு வந்து காண்பித்தார்.

அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வி.ஐ.பி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.

வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் திருமலையில் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. மேலும் 22-ந் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாள்.ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.17 லட்சம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதில் 8.08 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 39.73 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

94.22 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் சாமி உண்டியலில் ரூ.101.63 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

இன்று காலையில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமானது.

Tags:    

Similar News