உள்ளூர் செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கிடம் 2-வது நாளாக வாக்குமூலம், குற்ற பத்திரிகை தாக்கல்

Published On 2024-05-09 07:39 GMT   |   Update On 2024-05-09 07:39 GMT
  • வாக்குமூலம் பெறும் போது வக்கீலுடன் இருப்பதற்கு அனுமதி.
  • ஜாபர் சாதிக் பயன்படுத்திய 2 செல்போன்களை கடலில் வீசி எறிந்துள்ளார்.

சென்னை:

டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் தி.மு.க. அயலக அணியின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் வாக்கு மூலம் வாங்குவதற்காக டெல்லியில் உள்ள பாட்டி யாலா கோர்ட்டில் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேரிடமும் 8, 9, 10 ஆகிய 3 நாட்களும் அமலாக்கத் துறையினர் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் ஜெயிலுக்கு சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

இன்று 2-வது நாளாக ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கினார்கள். நாளையும் வாக்குமூலம் பெறப்படுகிறது.

ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெறும் போது அவரது வக்கீல் உடன் இருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜாபர் சாதிக்கின் வக்கீல் பிரபாகரன் டெல்லியில் உள்ளார்.

இதற்கிடையே ஜாபர் சாதிக்குக்கு எதிராக பாட்டியாலா கோட்டில் 153 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 42  பேரின் சாட்சியங்கள் இடம் பெற்றுள்ளன.

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 97 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலமும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதும் ஜாபர் சாதிக் தான் பயன்படுத்திய 2 செல்போன்களையும் உடைத்து நேப்பியர் பாலம் அருகே கடலில் வீசி எறிந்துள்ளார்.

போதை பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த வெளிநாட்டு கரன்சிகளை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள நிறுவனத்தில் இந்திய பணமாக மாற்றி உள்ளார். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News