சினிமா செய்திகள்

விஷால் ரசிகர்களை சந்தித்த இயக்குனர் ஹரி

Published On 2024-04-24 05:08 GMT   |   Update On 2024-04-24 05:08 GMT
  • நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே ‘கில்லி’ படம் காட்டுகிறது.
  • சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள்.

புதுச்சேரி:

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த 'ரத்னம்' திரைப்படம் நாளை மறுநாள் 26-ந்தேதி வெளியாக உள்ளது.

புதுவையிலும் 'ரத்னம்' திரைப்படம் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக உள்ள சண்முகா திரையரங்குக்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின் இயக்குனர் ஹரி நிருபர்களிடம் கூறியதாவது:-

விஷாலுக்கு 3-வது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளேன். மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் கொடுக்கும். மக்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது ஒரு பிரச்சனையை கண்டால் யாரும் உதவ முன்வருவதில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அப்படி உதவும் இளைஞனின் ஒரு கதை தான் இது. 'கில்லி' திரைப்படம் மறுபடியும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த படம் காட்டுகிறது.

இது போன்ற படங்களை பார்க்கும்போது நாமும் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள். தலைவர் படம் என்றால் சொல்ல தேவையில்லை. அவர் படம் எப்போது வந்தாலும் முதல் நாளில் பார்ப்பேன். எந்த ஒரு இயக்குனரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை.

நாட்டில் நடக்கும் சாதிய சிந்தனைகளை வைத்து மட்டுமே படங்கள் எடுக்கிறார்கள். சினிமா என்பது சாதி, மதம், மொழி என இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து விஷால் ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நகர பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி நேரு வீதி, பாரதி வீதி, குபேர் அங்காடி பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம் 'ரத்னம்' படம் பற்றி கூறி திரையரங்கில் பார்க்க அழைப்பு விடுத்தார்.

Tags:    

Similar News