search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து வீரர்கள்
    X
    இங்கிலாந்து வீரர்கள்

    U-17 உலகக்கோப்பை கால்பந்து: நாக்-அவுட் போட்டிகளில் ஈரான், ஸ்பெயின், மாலி, இங்கிலாந்து அணிகள் வெற்றி

    17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் ஈரான், ஸ்பெயின், மாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

    புதுடெல்லி: 

    இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் கடந்த திங்கள்கிழமை (16-ம் தேதி) தொடங்கியது. நேற்று (17-ம் தேதி) நான்கு போட்டிகள் நடைபெற்றது.

    கோவாவில் 5 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் ஈரான், மெக்சிகோ அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கிய 7-வது நிமிடம் ஜெர்மனியின் ஈரானின் ஷரிஃபி பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். அடுத்து 11-வது நிமிடமே ஈரானின் சையத் கோல் அடித்தார். அடுத்து 37-வது நிமிடம் மெக்சிகோவின் டி லா ரோசா தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் ஈரான் 2-1 என முன்னிலை பெற்றது.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதன்மூலம் ஈரான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.



    கோவாவில் 8 மணிக்கு தொடங்கிய நாக்-அவுட் போட்டியில் மாலி - ஈராக் அணிகள் மோதின. இப்போட்டியில் மாலி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. மாலி அணியில் திராமே (25), நிதியாயே (33, 90+4), கொனேட் (73) மற்றும் கமரா (87) ஆகியோர் கோல் அடித்தனர். ஈராக் தரப்பில் கரீம் 85-வது நிமிடம் கோல் அடித்தார். இதன்மூலம் மாலி அணியும் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.



    கவுஹாத்தியில் 5 மணிக்கு தொடங்கிய போட்டியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை செய்தன. பிரான்சின் பிண்டோர் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஸ்பெயினின்  மிராண்டா 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் இரண்டாம் பாதி நேர ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அபுல் ருயிஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.



    கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியின் முழுநேர முடிவில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இன்று நாக்-அவுட் சுற்று போட்டிகளில் கானா - நைஜர், பிரேசில் - ஹாண்டுரஸ் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×